வெலிசர − மஹபாகே பகுதியில் கடந்த 4ம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 17 வயதான உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
16 வயதான சிறுவன் ஒருவன் செலுத்திய அதிசெகுசு வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்திருந்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த மாணவன், கடும் காயங்களுக்கு உள்ளாகி, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறு சிகிச்சை பெற்றுவந்த மாணவனே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டு, வத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 19ம் திகதி kவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.