Our Feeds


Friday, November 5, 2021

SHAHNI RAMEES

விளையாட்டு வினையாகியது- மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


 யாழில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 14 பேர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அறிவுரையும், எச்சரிக்கையும் வழங்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 31ம் திகதி யாழ் நாவாந்துறை பகுதியில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, சர்ச்சையாகி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மோதலில் ஈடுபட்ட இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள். தாக்கப்பட்ட மாணவன், நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது, கிரிக்கெட் துடுப்பு மட்டை, விக்கெட் என்பவற்றால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், ஆரம்பத்தில் தாக்குதல் நடத்திய தரப்பைச் சேர்ந்த மூவரும், பதில் தாக்குதல் மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதான அனைவரும் 14 தொடக்கம் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதால் குறித்த அனைவரும் சிறுவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து இரு தரப்பினரும் சமரசமாக செல்ல விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு நீதிபதி அறிவுரையம், எச்சரிக்கையும் விடுத்து பெற்றோர்-பாதுகாவலர் ஒருவர் 50,000 ரூபா பிணையில் கையொப்பமிட்டு விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »