இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வந்த 4 வெளிநாட்டினருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ்களிலேயே மிக அதிகளவில் 50 பிறழ்வுகளுடன் புதிய வகை வைரஸ் தென்னாபிரிக்காவில் கடந்த 24ஆம் திகதி கண்டறியப்பட்டது. கவலைதரும் வைரசாக இதை வகைப்படுத்திய உலக சுகாதார நிறுவனம் ‘ஒமிக்ரோன்’ என பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உலக நாடுகள் சுதாரிப்பதற்குள் பல நாடுகளுக்குள் பரவிவருகிறது.
தற்போது அவுஸ்திரேலியா, பெல்ஜியம், போட்ஸ்வானா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, ஹொங்கொங், இஸ்ரேல், நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, செக் குடியரசு, சுவிஸ்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒமிக்ரோன் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் தென்னாபிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயண தடை விதித்துள்ளன.
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்பட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரோன் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நால்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.