(எம்.எப்.எம்.பஸீர்)
போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 107 பேர் 900 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வாதங்களை முன்வைத்துள்ளார்.
குறித்த வழக்குகளை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் நீதிமன்றில் வாதங்களை முன்வைக்கும்போதே ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்தார்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன் வைக்கப்பட்ட குறித்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 2022 ஜனவரி 7 ஆம் திகதி தனது உத்தரவை அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட 289 பேர் இரு மாவட்ட நீதிமன்றங்களில் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனமை தெரிந்ததே.