Our Feeds


Tuesday, November 2, 2021

SHAHNI RAMEES

கொரோனா தொற்றாளர்கள், மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு - இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை


 (எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12.2 சதவீதத்தினாலும் , மரணங்களின் எண்ணிக்கை 9 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளன.

இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது நாட்டில் உண்மையில் கொவிட் தொற்று பரவல் குறைவடைந்துள்ளதா என்று தோன்றுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

நாட்டில் மீண்டுமொரு கொவிட் பரவல் அலை ஏற்பட்டால் அது நாட்டின் பொருளாரத்திற்கும் மக்களுக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே அநாவசிய நடமாட்டம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இதனை மக்கள் மீது மாத்திரம் சுமத்துவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. இது தொடர்பான கண்காணிப்பினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் தொற்று முழுமையாகக் குறைவடைந்துள்ளதாக எண்ணி மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய கடந்த வாரத்தில் 5002 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது 12.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதே போன்று கடந்த வாரத்தில் 132 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கையானது அதற்கு முன்னைய வாரத்துடன் ஒப்பிடும் போது 9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது நாட்டில் உண்மையில் கொவிட் தொற்று பரவல் குறைவடைந்துள்ளதா என்று எண்ணத் தோன்றுகிறது.

எனவே இந்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு நாட்டில் மீண்டும் கொவிட் பரவல் தீவிரமடையாதிருக்க மக்கள் ஒத்முழைப்பு வழங்க வேண்டும்.

அதற்கமைய சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக கடைபிடிப்பதே இதில் முக்கியமானதாகும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

தற்போது பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமலும் , சமூக இடைவெளியைப் பேணாதமலும் நடமாடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எனவே இரு கட்டடங்களாக தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு கூட கொவிட் தொற்று காணப்படலாம். இவர்களிடமிருந்து ஏனையோருக்கும் பரவக் கூடும்.

மக்கள் அதிகளவில் ஒன்று கூடக் கூடிய இடங்களுக்குச் செல்வதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திருமண வைபவங்கள் , மரண சடங்குகள் உள்ளிட்டவற்றை இலகுவில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகக் கூடியவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இது மாத்திரமின்றி இவை தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்தும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம். அதற்கமைய இருமல் மற்றும் காய்ச்சலால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் , எழுமாற்று பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மற்றொரு கொவிட் கொத்தணி ஏற்படுமா என்பது தொடர்பில் இதன் மூலம் தீவிர கண்காணிப்பினை முன்னெடுக்க முடியும். தற்போதைய பொறுப்பற்ற நடவடிக்கைகளின் பிரதிபலனை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் தெளிவாகக் காண முடியும்.

நாட்டில் மீண்டுமொரு கொவிட் பரவல் அலை ஏற்பட்டால் அது நாட்டின் பொருளாரத்திற்கும் மக்களுக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே அநாவசிய நடமாட்டம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதனை மக்கள் மீது மாத்திரம் சுமத்துவதற்கு நாம் முயற்சிக்கவில்லை.

இது தொடர்பான கண்காணிப்பினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். பொது போக்குவரத்துக்கள் வைரஸ் இலகுவாக தீவிரமாக பரவக் கூடிய அபாயம் மிக்கவையாகும். இதனை கட்டுப்படுத்தவில்லையெனில் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »