அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அரசாங்கத்தினால் தீர்வொன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமது போராட்டம் இதுவரை முடிவடையவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்டத்தின் தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழி வரவு செலவுத்திட்டத்தில் கிடைக்கப் பெற்றதன் பின்னரே, தமது கோரிக்கை நிறைவேறியது என்ற அறிவிப்பை வெளியிட முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அரசாங்கத்தினால் இன்றைய தினம் வழங்கப்பட்ட உறுதிமொழி குறித்து, அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கம் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை நடத்தி, அதன் பின்னரே கூட்டு அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.