'ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதியின் செயலணிக்கு தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்தது மீண்டும் இனங்களுக்கிடையில் இந்த நாட்டில் ஒரு அமைதியின்மை சூழ் நிலை ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்.”
இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஏ. பி. சக்திவேல் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
யார் இந்த கலகொட அத்தே ஞானசார தேரர்? பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த கால செயல்பாடுகளை பார்க்கும் பொழுது அவர் ஒரு மத போதகரா? அரசியல்வாதியா? இனவாதியா? அல்லது மதவாதியா? என ஒன்றுமே தெரியவில்லை.
இன்று “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் இந்த செயலணிக்கு தமிழர் தேவையில்லை என கூறி வருகின்றார். இதனை பார்க்கும் பொழுது அவர் மீண்டும் இனவாதத்தை கக்குவது போல் இருக்கின்றது.
இன்று இந்தநாட்டில் அஸ்கிரிய தேரரர் போன்ற எத்தனையோ நல்ல பௌத்த மத குருமார்கள் நாட்டின் வளர்சிக்காகவும் அபிவிருத்திக்காகவும் ஒற்றுமைக்காகவும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இன மத கட்சி பேதக்களை மறந்து ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என போதனைகளை நடத்திவரும் இவ்வேளையில் பாதையில் இறங்கி இனவாதமும் மதவாதமும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திய ஒருவருக்கு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக இருந்து செயல்பட முடியுமா?
இவரின் கடந்தக்கால செயல்பாடுகளை நாம் சிந்தித்து பார்த்தால் இவரிடம் ஒரு சிறந்த சேவையை சிறு பான்மை மக்களுக்கு கிடைக்குமென எதிர்பார்க்க முடியுமா ?
இந்த செயலணிக்கு தமிழ் பிரதிதுவம் வழங்கப்படாதது தமிழ் மக்கள் மனதை புன்படுத்தும் செயலாகும்.
ஜனாதிபதி வாக்கு வங்கிளை மாத்திரம் வைத்துக்கொண்டு மக்களை மதிப்பீடு செய்யக்கூடாது. தனக்கு யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்க வில்லையென நிர்ணையிக்க முடியாது. ஒருவர் ஜனாதிபதியான பின்பு சிந்னைகள் கொள்கைகளில் ஒரு மாற்றம் வர வேண்டும்.
இந்த நாட்டில் பல்லின மக்கள் வாழுகின்றார்கள், யார் வாக்களித்தார்கள் , யார் வாக்களிக்க வில்லை என பார்க கூடாது. ஒருவர் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்தால் அவர் இந்த நாட்டின் தலைவர்.
இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்தால் நாடு அபிவிருத்தியடையும். இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகமும் குறைகள் இன்றி நல்லப்படியாக வாழ்ந்தால் ஜனாதிபதிக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். ஆனால் யாராவது ஒரு சமூக துன்பத்தை அனுபவித்தால் அந்த ஜனாதிபதிக்கு கெட்ட பெயரும் மக்களிடத்தில் வெறுப்பும் ஏற்படும்.
இந்த நாட்டிற்கு நன்கு படித்த ஒரு ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ கிடைத்திருக்கின்றார். அவரிடமிருந்து மக்கள் எதிர்பார்த்தது அதிகம். இந்த நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகளை விட இந்த ஜனாதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.
இன்று அவரால் உருவாக்கப்பட்ட செயலணியில் நாட்டில் இனவாதம் மதவாதம் பேசிக்கொண்டிருக்கும் ஒருவரை ஜனாதிபதியின் செயலணிக்கு தலைவராக்கியது தமிழ் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி புதிய செயலணிகள் உருவாக்கப்படும் பொழுது சிறு பான்மை மக்களை இணைத்துக்கொள்ள வேண்டும். என்று சக்திவேல் மேலும் கூறினார்.