சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் குறித்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
குருணாகல் - உடுபெத்தாவ பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு காணாமல் போயிருந்த இருவர் இன்று (10) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, குருணாகல் - ரிதீகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தம்பதியினர் மரணித்தனர்.
நேற்றிரவு இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
அத்துடன் கேகாலை - கலிகமுவ - ஹத்னாகொட பகுதியில் இன்று (10) அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீடொன்று மண்ணில் புதைந்ததோடு அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களில் தாய் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், தந்தை மற்றும் மகனை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.