உரத்தைத் தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான முடிவால் சிலோன் டீ என்னும் நற்பெயர் அழிந்து போய்க்கொண்டிருப்பதாகவும், தேயிலை அறுவடை 50% குறைவடைந்துள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதன் காரணமாக, தேயிலைத் தொழில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது, தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் சரிந்துவிட்டது மற்றும் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு போதுமான தேயிலைக் கொழுந்துகள் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் உள்ள பத்தேகம தொகுதியின் வந்துரம்ப மாபொட்டுவன பகுதியில் தேயிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய கொவி ஹதகெஸ்ம நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று (13) பங்கேற்றார்.
இதன்போது முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விஜேபால ஹெட்டிஆரச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பத்தேகம பிரதான அமைப்பாளருமான பந்துலால் பண்டாரிகொட உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இரசாயனப் பொருட்கள் மற்றும் உரம் இல்லாமல் இந்நாட்டில் தேயிலை பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியாது என குழந்தைக்குக் கூடத் தெரியும் ஆனால் அரசுக்கு அது தெரியாது எனவும், தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இந்த உரத் தடையானது இலங்கையின் சிலோன் டீ என்ற நற்பெயரை உலகிலிருந்து அழிக்கச் செய்யும் ஒரு சதி என்றும் அவர் கூறினார்.
பொதுவாக தேயிலை நாற்றுகளுக்கு டி -65 உரம் அவசியம் என்றும், தேயிலை நாற்றுகளுக்கு முறையான போசாக்கு கிடைக்காத போது தேயிலைச் செடி மற்றும் அதிலே வளருகின்ற தேயிலை மரம் மோசமடைந்து தரமான நாற்றுகளை பெறும் திறனை இழக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்கும் போது மரம் அதன் சில போசாக்குப் பகுதிகளை இழப்பதுடன், மரம் வளர வேண்டுமானால், நைதரசன், பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை மரத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், அரசாங்கத்தின் முடிவால் தேயிலை மரத்திற்கு பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு உரம் இல்லை என்றும் தெரிவித்தார். இதன் விளைவாக, குறுகிய கால தேயிலைக் கன்றுகளைப் பெற்றுக் கொள்ள முடியுமேயன்றி நீண்ட கால தேயிலை மரத்தைப் பெறும் திறன் இல்லாது போகும் என்றும் தெரிவித்தார்.
சேதனப் பசளையால் மாத்திரம் வெற்றிகரமான வணிக ரீதியான தேயிலைப் பயிர்செய்கையை மேற்கொள்ள முடியாது எனவும் தேயிலைத் தொழில் மிகவும் நெருக்கடியில் உள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.