(எம்.ஏ.றமீஸ்)
அக்கரைப்பற்று தேசிய பாடசாலையை அண்டிய பகுதியில் இன்று (10) அதிகாலை காட்டு யானைகள் சில உட்புகுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
அதிகாலை 5 மணியளவில் உட்புகுந்த இக்காட்டு யானைகள் பாடசாலையின் சுற்று மதிலை உடைத்து நாசமாக்கியுள்ளதுடன், பாடசாலையினை அண்டிய பகுகளில் இருந்த சில உடைமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக இரவு வேளைகளில் காட்டு யானைகள் சில இப்பிரதேசத்தில் நடமாடுவதால் பல்வேறான இன்னல்களுக்கு தாம் முகம்கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதேவேளை, அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் சுற்று மதிலை இரண்டாவது முறையாகவும் காட்டு யானைகள் உடைத்து சேதமாக்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.பி.முஜீன் தெரிவித்தார்.
இரவு வேளைகளில் தினமும் இப்பிரதேசத்திற்குள் உட்புகும் காட்டு யானைகள் பாடசாலை உடைமைகளுக்கு சேதத்தை உண்டு பண்ணி வருவதோடு, மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் பல்வேறான சேதங்களை ஏற்படுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நெல் அறுவடை நிறைவடைந்தவுடன் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையினை அண்டிய பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பதோடு, பாடசலையின் உடைமைகளுக்கும் இக்காட்டு யானைகள் சேதத்தினை உண்டு பண்ணி வருவதால் பல்வேறான இன்னல்களுக்கு தாம் முகம்கொடுத்து வருவதாக பாடசாலை அதிபர் ஏ.பி.முஜீன் மேலும் தெரிவித்தார்.