(வாழைச்சேனை நிருபர் க.ருத்திரன்)
மட்டக்களப்பு புனானையில் உள்ள பெற்றிக்கலோ கெம்பஸில் ‘பெறுமதி வாய்ந்த கணிணி பொருட்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் இலத்திரனியல் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை திருடியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை பெற்றிக்கலோ கெம்பஸுக்குள் காணப்பட்ட வேன் ஒன்றை கடமையிலிருந்த பொலிஸார் சோதனையிட்டபோது மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, வேனும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
பெற்றிக்கலோ கெம்பஸ் தற்போது கொவிட் -19 நோய் தடுப்புக்கான சிகிச்சை நிலையமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு பணியாற்றும் சிலரே இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மடிக்கணினிகள் 3, மேசை விளக்குகள் 7,மற்றும் இலத்திரணியல் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் . எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்தச் சோதனையை மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், பொருட்க்கள்,மற்றும் வாகனம் போன்றவற்றை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.