பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தாம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட டயானா கமகே, 20வது திருத்த சட்டமூலத்தின் போது கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக, திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையால் கட்சியின் கொள்கைகளுக்குப் புறம்பாக செயற்பட்டதாக கருதி ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ள கட்சித் தலைமை செயற்பட்டது.
ஒழுக்காற்றுக் குழுவின் பரிந்துரைகள் கட்சியின் செயற் குழுவில் நேற்று(07) சமர்ப்பிக்கப்பட்டது.
ஒழுக்காற்றுக் குழுவிற்கு ஐந்து தடவைகளாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சந்தர்ப்பத்திலேனும் அவர் பங்கேற்கவில்லை என கட்சி கூறுகின்றது.
அதன் பிரகாரம் ஒழுக்காற்றுக்குழுவின் பரிந்துரைகளை நேற்று (07) கூடிய செயற் குழு (Working Committee) ஏகமானதாக ஏற்றுக் கொண்டதன் பிரகாரம் கட்சியின் கொள்கைகளைக்குப் புறம்பாக செயற்பட்டமை நிரூபனமானதால் அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கக் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.