(நா.தனுஜா)
அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு ஒன்றைக் கூறவிரும்புகிறோம். முதுகெலும்பு இருந்தால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி அதன் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கு அவர்கள் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, அதனைத் திறம்பட முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்குரிய வேலைத்திட்டம் எம்வசமுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமகாராமவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.