தேசிய அரசியல் மற்றும் பிராந்திய அரசியலில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்கின்றோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், அரசியலுக்கு அப்பால் சென்று மக்களின் தேவை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினூடான நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல், கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று (30) நடைபெற்றது. அதில் தலைமைத்தாங்கி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய அரசியலில் சவால் மிக்க ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது. நிதியமைச்சர் பெஷில் ராஜபக்ச, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மிக நுட்பமான முறையில்
இந்த வரவு- செலவுத் திட்டத்தை தயாரித்து வருகிறார்.
தேசிய அரசியல் மற்றும் பிராந்திய அரசியலில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு முன் நோக்கி செல்கின்றோம். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எவ்வாறாயினும் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மிக மிக முக்கியமான விடயமாகும் என்று தெரிவித்தார்.
இதன் போது, பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் ஒரு பிரிவுக்கு 30 இலட்சம் ரூபா ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.
அத்துடன், இங்கு மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.