ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்குமானால் அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமே தவிர, மாறாக தகவல் வழங்கிய ஊடகவியலாளர்களை தேடிச்சென்று அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கமானது ஊடகவியலாளர்களுக்கு இன்னல்களை விளைவிக்கும் அரசாங்கம் அல்லவெனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களிடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஊடக நிறுவனங்களுக்குச் சென்றுள்ளமை வழக்கத்திற்கு மாறானதும், பொருத்தமற்ற ஒரு செயற்பாடு எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.
மேலும், ஊழல் மோசடி சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்தார்.