‘எங்களுடைய கட்சி என்றுமே இனவாதத்துடன் நடந்து கொண்டதில்லை, நாங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில், இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் உடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “பௌத்த கொடியை மாத்திரம் ஏந்திக் கொண்டு செல்வதன் மூலம் மாத்திரம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியாது.
எங்கள் கட்சி பல தசாப்தங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்த ஒரு கட்சியாகும். அன்று எங்களுடைய கட்சியின் தலைவி முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பெருந்தோட்ட மக்களுக்கான வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தார். தொழில் அமைச்சர் என்ற வகையில் நான் அவர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுத்தேன்.
எனவே எங்களுடைய கட்சி தொழிலாளர்களுக்கு தேவையான விடயங்களை அந்தந்த காலத்தில் செய்து கொடுத்து இருக்கின்றது.