அனைத்து விடயங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்து ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது. அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும், முரண்பாடற்ற வகையிலும் ஒரே நாடு - ஒரே சட்டம் உருவாக்கத்திற்கான சட்ட வரைபு தயாரிக்கப்படும். புரையோடி போயுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்த தீர்மானம் மகிழ்வுக்குரியது என ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
விசேட ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பில் கொழும்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சட்டத்தின் முன் அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். நபர்களுக்கு மத்தியில் இனம், மதம், மொழி ஆகிய வரையறுக்கப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வேறுபாடுகள் காணப்படும் போது அவ்விடயத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.
கடந்த காலங்களில் அவ்வாறான தன்மைகள் சமூகத்தின் மத்தியில் காணப்பட்டதை பல்வேறு காரணிகள் ஊடாக அறிந்துகொள்ளலாம்.
இலங்கையினுள் ஒரே நாடு-ஒரே சட்டம் என்ற கொள்கையை உறுதிப்படுத்துவதற்கு இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பல்வேறு காரணிகளினால் தோல்வியடைந்தன.
ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதில் அரசியல் காரணிகளும், அரசியல் நோக்கங்களும் ஒருபோதும் செல்வாக்கு செலுத்தக் கூடாது.
ஒரே-நாடு, ஒரே சட்டத்தை நிலைநாட்ட ஜனாதிபதி இந்த செயலணியை நியமித்துள்ளமை மகிழ்வுக்குரியது. அனைத்து இன மக்களின் மதம், கலாச்சாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும்.
அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற விதத்தில் ஒரே நாடு – ஒரே சட்டம் உருவாக்கத்திற்கான சட்ட வரைபு தயாரிக்கப்படும். அனைத்து தரப்பினரும் அந்த இலக்கை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இதுவரை காலமும் புரையோடிப் போயிருந்த பிரச்சினைகளுககு இனிவரும் காலங்களிலாவது சிறந்த தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து விடயங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்து ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது.என்றார்.