காஹவத்தை, வட்டபொத்த தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் தாக்குதல்களை நடத்தியதுடன், சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த தாயொருவர் உட்பட மூன்று இளைஞர்களும் காஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோட்டக் குடியிருப்பொன்றும், நான்கு ஓட்டோக்களும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. தாக்குதல்களுக்கு உள்ளான இளைஞர்களில் ஒருவருக்குச் சொந்தமான சுயதொழிலில் ஈடுபடும் இயந்திரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க நகையும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யடாகர கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கும்பலே, தோட்டத்துக்குள் புகுந்து இவ்வாறு தாக்குதலை நடத்தியுள்ளது.
சம்பவத்தை கேள்வியுற்று அத்தோட்டத்துக்குச் சென்றிருந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப- செயலாளர் ரூபன் பெருமாள் அச்சத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து, இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோருக்கும் ரூபன் பெருமாள் தெரியப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை வன்மையாக கண்டித ரூபன் பெருமாள், அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்காக தான் துணிந்து நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.