நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் நாடு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, உடனடியாக 20 ஆவது திருத்தத்தை நீக்கி விட்டு 19ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினாா்.
இதுதொடர்பில் விளக்கமளித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டாா்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனக்கு அரசியல் அனுபவம் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதால், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பிரதமர் முன்னிலையாகி சகல அமைச்சர்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஒப்புக்கொண்டுள்ளாா்.
இதுவொரு சிறந்த அறிவிப்பு. காரணம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தோல்வியடைந்துள்ளது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். 20 ஆவது திருத்தத்தினால் அமைச்சரவை முறைமை செயலிழந்துள்ளது. பொருளாதாரம், கொவிட் – 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்பவற்றுக்கு அரசாங்கத்துக்குள்ளேயே அரசாங்கமொன்று செயற்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அரிசி விலையை தீர்மானிப்பதற்காக அரசாங்கத்துக்கு வெளியில் அரசாங்கமொன்று செயற்பட்டது. ஆகவே, ஜனாதிபதி அறிவித்துள்ளதை போன்று ஆட்சி நடவடிக்கைகளை சம்பிரதாய ரீதியாக அமைச்சரவையின் கீழ் கொண்டுச் செல்வதால் நிர்வாக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்லமுடியும். அதனால், உடனடியாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கிவிட்டு 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினாா்.