Our Feeds


Sunday, October 3, 2021

Anonymous

ரிஷாத் வெளிக்காரணிகளுக்காகவே சிறை வைக்கப்பட்டுள்ளார் - அவர் ஒரு அரசியல் கைதி - ரிஷாதின் சட்டத்தரணி மன்றில் வாதம்

 



(எம்.எப்.எம்.பஸீர்)


வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனுக்கு பிணை வழங்க கடந்த வெள்ளிக்கிழமை (01) மறுத்த நீதிமன்றம் அவரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் (5 ஆவது சந்தேக நபர் தொடர்பில் மட்டும் ) மீளவும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், ரிஷாத் பதியுதீனுக்கு பிணை கோரினார்.

‘ஹிஷாலியின் மரணம் அல்லது அதனுடன் தொடர்புடைய சம்பவம் இடம்பெறும்போது எனது சேவை பெறுநர் வீட்டில் இருக்கவில்லை. சிஐடி தடுப்பில் இருந்தார். ஹிஷாலினி வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படும்போதும் ரிஷத் பதியுதீன் விளக்கமறியலில் இருந்தார்.

அவருக்கு இந்த சம்பவத்தில் உள்ள வகிபாகம் என்ன? சாட்சியங்கள் இல்லாமல் அவர் வெறுமனே வெளிக்காரணிகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரிஷாத் பதியுதீன் தற்போது ஒரு அரசியல் கைதியாகவே விளக்கமறியலில் உள்ளார்.

சிறையில் தொலைபேசி பயன்படுத்திய விடயம் இந்த சம்பவத்துடன் எப்படி தொடர்புபடலாம். அவர் இந்த விவகாரத்துக்கு அழுத்தம் கொடுக்க தொலைபேசியை பயன்படுத்தியதாக ஒரு முறைப்பாடேனும் உள்ளதா? அப்படி இருக்கையில் எப்படி அந்த விடயத்தை இதனுள் நுழைக்கலாம்.

வழக்குடன் தொடர்புபடாத விடயங்களை காட்டி, எனது சேவை பெறுநரை விளக்கமறியலில் வைக்கக் கோருவது அநியாயமானது.

அத்துடன் ஒரு செய்தியாளர் தொடர்பில் இங்கு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் தற்போது வருவதில்லை எனவும் அதனையும் சந்தேகமாக அரசின் பிரதி சொல்சிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியிருந்தார்.

அப்படியானால் இந்த விடயத்தில் ஆரம்பத்தில் விசாரணைகளை முன்னெடுத்த, இந்த நீதிமன்றிலும் ஆஜராகிய பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த எங்கே? அவர் தற்போது ஏன் நீதிமன்றுக்கு வருவதில்லை. வருணி போகஹவத்தவுக்கு பிரதேச சபை தலைவர் ஒருவருக்கு எதிரான விவகாரம் ஒன்றில் சாட்சிகளை போலியாக உருவாக்கியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அபராதமும் விதித்துள்ளது. அப்படியான ஒருவர்தான் இதில் ஆரம்பத்தில் விசாரணைகளுடன் தொடர்புபட்டிருந்தவர். எனவே எனது சேவை பெறுநருக்கு பிணை மறுக்க காரணிகள் இல்லை. எனவே பிணையளிக்கவும்.’ என கோரினார்.

இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, பிணைக் கோரிக்கையை நிராகரித்தார். விளக்கமறியலில் இருந்தபோது சந்தேக நபரின் நடவடிக்கைகளை ஆராயும்போது, அவருக்கு பிணையளித்தால் விசாரணைகளை பாதிக்கும் என நம்புவதாகவும் அதனால் பிணையை மறுப்பதாகவும் கூறிய நீதிவான் வழக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »