Our Feeds


Thursday, October 28, 2021

Anonymous

விகிதாசார தேர்தல் முறையே சரியானது, சு.க அதனையே ஆதரிக்கும் - மனோவிடம் முன்னால் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

 



முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் மைத்ரிபால சிறிசேனவை தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் சந்தித்துள்ளார்.


தேர்தல் முறைமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவதற்காகவும், அதுபற்றி கலந்துரையாடவுமே மைத்ரிபாலவை தாம் சந்தித்ததாக மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இச்சந்திப்பு மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது,

தேர்தல் நடக்கப் போகிறதோ, இல்லையோ ஆனால், தேர்தல் முறைமையை பூரணமாக மாற்றி விகிதாசார முறைமையை ஒழித்து, கலப்பு முறைமையை கொண்டுவந்து, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, இந்நாட்டில் இரண்டு கட்சி ஆட்சியை நிலைபெறச் செய்ய அரசாங்கம் கங்கணங்கட்டி செயற்படுகிறது.

இதற்கு உறுதுணையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கலப்பு முறைமையை ஆதரிக்கிறது என தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவுக்குழுவில் அறிவித்துள்ளார்.

இது ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் மைத்ரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் என்னிடம் நேரடியாக அறிவித்திருந்த நிலைப்பாட்டுக்கு முரணாக உள்ளதென நான் இச்சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இன்று நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. இந்நிலையில், உத்தேச கலப்பு தேர்தல் முறைமை தமிழ், முஸ்லிம் கட்சிகளை மட்டுமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளையும் அழித்துவிடும் என்று மைத்ரிபாலவிடம் நான் எடுத்துக் கூறினேன்.

தற்போது தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் விகிதாசார முறைமையையே ஆதரிக்கின்றன. கலப்பு முறைமையை எதிர்க்கின்றன.

கலந்துரையாடலின்போது, எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் மைத்ரிபால சிறிசேன, தெரிவுக்குழுத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுவது பிழை. அங்கே எமது கட்சியின் நிலைப்பாடு சரிவர கூறப்படவில்லை. விரைவில் நமது கட்சியின் அதிகாரபூர்வ குழு அங்கே வந்து எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கலப்பு முறைமையை ஏற்றுக்கொள்ளாது. நாம் விகிதாசார முறைமை யையே ஆதரிக்கிறோம். உள்ளூராட்சி தேர்தலில் கலப்பு முறைமை இருக்கலாம். ஆனால், மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு விகிதாசார முறைமையே சரியானது. இதுவே எங்கள் நிலைப்பாடு என கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »