Our Feeds


Sunday, October 3, 2021

Anonymous

பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பரீட்சித்தமைக்காக பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்! விசாரிக்க பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்று பரிசீலித்த பொலிஸ் உத்தியோகத்தரை, பாதுகாப்பு அமைச்சின் 2 ஆம் செயலர் என கூறும் ஒருவர் ஏசிப் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைத் தளங்களில் பரவி வருகிறது.


இவ்வாறான நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறித்த செயலாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர், அதிவேக பாதை ஊடாக பயணிக்கும்போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களது விபரங்களைப் பெற முயற்சித்துள்ளார்.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலர்களில் ஒருவர் என கூறிக்கொள்ளும் குறித்த அதிகாரி, தனது கையடக்கத் தொலைபேசியில் வேறு அதிகாரிகளுக்கு அது தொடர்பில் அறிவிப்பதும், அவரும், அவர் மனைவியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை திட்டுவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது வழமையான கடமைகளை செய்வதும், செயலர் என கூறிக்கொள்ளும் குறித்த சாரதியை அறிவுறுத்துவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

மத்தறை – அபரெக்க அதிவேக பாதை நுழைவாயில் ஊடாக அத்துருகிரிய வரை பயணிக்கும் நோக்கில் கெப் வண்டியில் பயணித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலர்களில் ஒருவர் எனக் கூறிக் கொள்ளும் நபரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பொலிஸ் உத்தியோகத்தர் கோரி பரீட்சித்தமையே சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணியாகும்.

எவ்வாறானும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பரீசித்தமையை அடுத்து, அமைச்சின் செயலர் எனக் கூறிக்கொள்ளும் குறித்த நபர் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அது தொடர்பில் அறிவிப்பதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, தனது கடமைகளை செய்த 40938 எனும் இலக்கத்தையுடைய ருவன் எனும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் திணைக்களத்தின் மனித வளப் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர குமாரவின் கையெழுத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய இடமாற்றப்பட்டுள்ளார்.

அதிவேக பாதை பொலிஸ் பிரிவிலிருந்து மாத்தறை பிரிவுக்கு சேவை அவசியம் கருதி அவர் இவ்வாறு இடமாற்றப்படுவதாக அந்த இடமாற்ற அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸிடம் கேட்டபோது, குறித்த இடமாற்றம் தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் தலையீட்டுடன், குறித்த இடமாற்றத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »