கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத யாசகர்களைத் தேடி, அவர்களை தடுப்பூசி பெறச் செய்யும் விசேட நடவடிக்கை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய இதற்கான முதற்கட்ட விசேட சோதனை நடவடிக்கைகள் 7 மணி நேரம் நடத்தப்பட்டுள்ளது.
சுகாதார வழி முறைகளை மீறி, நகர்ப்புறங்கள், பஸ் தரிப்பு நிலையங்கள் ,பாதைகள், சமிக்ஞை விளக்குகள் உள்ளிட்ட இடங்களில் யாசகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இதன்போது இலக்கு வைக்கப்பட்டு பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (30) முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடத்தப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கைகளில் 541 யாசகர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 77 பேர் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக் கூட பெறாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களில் 22 பேர் உடனடியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய 55 பேருக்கும் படிப்படியாக தடுப்பூசி செலுத்த மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிமனை ஊடாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.