நாட்டில் இதுவரையில் 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட 69,130 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகக் குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
அதில் 67 சிறுவர்கள் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், ஒரு மாதத்திற்கும் குறைவான வயதுடைய 17 சிசுக்களும், ஒரு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு இடைப்பட்ட வயதுடைய 17 சிசுக்களும், ஒரு வயது முதல் 5 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 13 சிறுவர்களும், 6 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட 12 சிறுவர்களும், 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட 5 சிறுவர்களும், 15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுவர்களும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் கபில ஜயரத்ன பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டி தற்போது கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே அந்த சுகாதார வழிகாட்டியில் குறிப்பிட்டுள்ளவாறு மாணவர்களை வழிநடத்த வேண்டும் என்று குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.