சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தெளிவான தீர்மானமொன்றை அரசாங்கம், எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
“அவ்வாறு தீர்வு வழங்காவிடின் தங்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
“தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரை நிகழ்நிலை (Online) கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்போம்” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோட்டை ஶ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்கத்தின் மகாநாயக்கர் இத்தேபான தர்மாலங்கார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் இலவச கல்வியின் தந்தையான சி.டப்ளியு. டப்ளியு கன்னங்கராவின் 137 ஆவது ஆண்டு ஜனன தின நிகழ்வு நேற்று முன்தினம் (13) நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை நேற்று (13) விடுத்தார்.
சிறார்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.