ஆப்கானிஸ்தான் குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 50 பேர் பலியாகினர். கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து நடைபெறும் மிகப்பெரிய வன்முறை இதுவாகும்.
டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் என்ற அரசு சாரா அமைப்பில் பணிபுரிந்து வரும் மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், “குண்டுவெடிப்பில் காயமடைந்த 90இற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். உயிரிழந்த 15இற்கும் மேற்பட்டோரின் உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. சிகிச்சைக்காக பலர் வந்து கொண்டே இருக்கின்றனர்” என்றார்.
குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்துள்ளனர் என்பது குறித்து தெரியவில்லை என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்புக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இதுபோன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு தலிபான் அமைப்பின் எதிரி அமைப்பான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த காலத்தில் பொறுப்பேற்றிருந்தது. வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழந்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உள்ளூர் வணிகர் ஜல்மை அலோக்ஸாய் கூறுகையில், “40இற்கும் மேற்பட்ட இறந்த உடல்களை கண்டோம். அம்பியூலன்ஸ் வாகனங்கள் உடல்களை மீட்க சென்று கொண்டிருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் கொள்ளப்படுவதாக டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பில் பணியாற்றிவரும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மருத்துவமனையின் பிரதான வாயிலில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி தங்கள் உறவினர்களுக்காக அழுகிறார்கள். ஆனால், ஆயுதமேந்திய தலிபான் இராணுவத்தினர் மற்றொரு குண்டுவெடிப்பு நடக்காமல் தடுக்க கூட்டங்களை கலைக்க முயற்சி செய்கிறார்கள்” என்றார்.