நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சற்று முன்னர் முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (01) அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், நாடு முழுவதும் அமுலாகும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இதன்படி, சுமார் 43 நாட்களின் பின்னர், இன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார்.
அத்துடன், இன்று (01) தொடக்கம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடரும் என சுகாதார அமைச்சு நேற்று (30) வெளியிட்ட சுகாதார வழிகாட்டியின் ஊடாக அறிவித்திருந்தது.