அரசாங்கத்தின் குறைகள் மற்றும் இதுவரை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாத நடவடிக்கைகளை இனங்கண்டு செயற்பட்டால், துண்டாக்கப்பட்டுள்ள மக்களின் நம்பிக்கையை எதிர்வரும் மூன்று வருடங்களில் மீண்டும் கட்டியெழுப்ப முடியுமென கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளாா்.
கட்டுபெத்த இலங்கை தொழ்லுதுறை அபிவிருத்திச் சபையில் நேற்று (11) இடம்பெற்ற வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் இரண்டு ஆண்டை கடந்துள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எங்களிடமுள்ள குறைப்பாடுகள் என்ன?, தவறு என்ன?,எதை செய்திருக்க கூடாது என்பவற்றை சரியாக அடையாளங்கண்டு முன்னோக்கிச் சென்றால் எதிர்வரும் மூன்று வருடங்களில் மக்களின் நம்பிக்கையை மேலும் வென்றெடுப்பது என்பது சுலபமான விடயம்.
ஆனால், இந்த நடவடிக்கையின் போது சகலரும் நேர்மையாக செயற்பட வேண்டும். மக்களின் எண்ணம் எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், கடந்த காலம் தொடர்பில் சிந்தித்து சரியான பாதையில் பயணிக்க முயற்சித்தாலும் நடைமுறையில் அதனை சாத்தியப்படுத்த முடியாது.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் சரி ஏனைய நடப்புகளிலும் சரி முறையான தீா்மானங்களை எடுக்காத அரசாங்கத்தையே மக்கள் அன்று நிராகரித்தாா்கள். மக்களின் நிலைப்பாட்டுடன் விளையாட எங்களால் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.