லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனங்களை ஒன்றிணைத்து, சியோலிட் என்ற எரிவாயு நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஃலாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.
நியூஸ் பெஸ்ட்டிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு 25 வீத பங்குகளையும், லிட்ரோ நிறுவனத்திற்கு 75 வீத பங்குகளையும் உள்ளடக்கிய வகையில் நிதி அமைச்சின் கண்காணிப்பில் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவையில் முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதையடுத்து அமைச்சரவை இணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, அதனூடாக சியோலிட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
இந்த நிறுவனத்தின் தலைவராக சுசந்த சில்வா என்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமையவே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
பெற்றோலிய கூட்டுதாபனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளராக சுசந்த சில்வா இதற்கு முன்னர் செயற்பட்டுள்ளார்.
இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், நான்கு தடவைகள் பணிப்பாளர் சபை கூடியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, சமையல் எரிவாயு இறக்குமதிக்காக ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் சர்வதேச சந்தையில் விலை மனுகோர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
எதிர்வரும் மாத நடுப்பகுதியில் சமையல் எரிவாயு இறக்குமதிக்கான விலை மனு கோரப்படுமாயின், நாட்டிற்கு தட்டுப்பாடின்றி எப்போது சமையல் எரிவாயு கிடைக்கும் என்பது தொடர்ந்தும் கேள்வி குறியாகவே காணப்படுகின்றது என நியூஸ் பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.