கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றியீட்டியுள்ளது. இதனால், ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 3 ஆவது தடவையாக பிரதமராக பதவி வகிக்கவுள்ளார். எனினும் தனியாக ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசனங்களைப் பெறுவதற்கு அக்கட்சி மீண்டும் தவறியுள்ளது.
கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் திங்கட்கிழமை (20) நடைபெற்றது. 338 ஆசனங்களைக் கொண்ட கனேடிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 170 ஆசனங்கள் தேவை.எனினும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 ஆசனங்களை வெல்லக்கூடும் என்பதை இதுவரை வெளியான பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன.
2015 ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி 177 ஆசனங்களையும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 157 ஆசனங்களையும் வென்றிருந்தது.
4 வருட பதவிக்காலம் முடிவதற்கு 2 வருடங்களுக்கு முன்னதாகவே தேர்தலை நடத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தமாதம் உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைக்க முடியும் என அவர் நம்பியிருந்தார். எனினும், மீண்டும் எதிர்க்கட்சியினரின் தயவிலேயே அவர் சட்டங்களை இயற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.