தற்போதை அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டுமென்ற திட்டங்கள் இருக்குமாயின், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியேற நினைக்கும் கட்சிகளை பலவந்தமாக தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என தெரிவித்த பிரதமர், யார் அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் தமது அரசாங்கம் நிலைத்து நிற்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டுள்ளன. எதிர்க்கட்சிகளில் சிலர் எப்போதும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பற்றி அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.
உலக சந்தையில் தற்போதைய சூழ்நிலை காரணமாக பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. மேலும் எங்களையும் கடுமையாக பாதிக்கும் இந்த சூழ்நிலைமைய நாமும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தற்போது அரசாங்கத்தின் இடத்தில் செயற்பட்டிருந்தால் நாடு இன்னும் பாதாளத்தை நோக்கி சென்றிருக்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.