கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானம்.
- புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதாரத்தை இயக்குவோம்…
- பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு…
- சுற்றுலா வலயங்களுக்கு அருகில் ஆயுர்வேத கொவிட் சிகிச்சை நிலையங்கள்…
- ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சுதேச மருந்துப் பொதி விநியோகிக்க ரூ.6,000 மில்லியன்…
- தாமதமின்றி விமான நிலையத்தில் PCR பரிசோதனை…
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கி நாட்டை மீண்டும் திறக்கும் போது பிறப்பிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை, முழுமையான திட்டமிடலுடன் தயாரிக்க, கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்தது.
03 துறைகளின் கீழ் இந்தத் திட்டமிடல் தயாரிக்கப்பட உள்ளதோடு, அரச துறையைச் செயற்படுத்துவதற்கான முறைமைகளைத் தயாரிக்கும் பொறுப்பு பொது நிர்வாக அமைச்சிடமும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான முறைமைகளைத் தயாரிக்கும் பொறுப்பு போக்குவரத்து அமைச்சிடமும், தனியார்த்துறைச் சேவைகளை நடத்துவதற்கான முறைமைகளைத் தயாரிக்கும் பொறுப்பு தொழிற்றுறை அமைச்சிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சுகாதார நிபுணர் குழுக்கள் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டல்களின் கீழ், மேற்படி பொறுப்புவாய்ந்த அமைச்சுகளால் பரிந்துரைகள் வெளியிடப்படும்.
நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், இன்று (24) முற்பகல், கொவிட் ஒழிப்புக்கான செயலணியின் கூட்டம், வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மேற்படி திட்டமிடல் செயற்படுத்தப்படும் போது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உள்ளூராட்சி மன்றங்கள், கிராமிய அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் ஊடகத்துறையின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, பெசில் ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.