அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த இறுதிக் காலத்தில், அவர் முரட்டுத் தனமான தீர்மானங்களை மேற்கொண்டு சீனாவுடன் யுத்தத்தை ஆரம்பிக்கக்கூடும் என்ற அச்சத்தால் அமெரிக்காவின் அதி உயர் படை அதிகாரியான ஜெனரல் மார்க் மிலீ, சீன இராணுவ அதிகாரியுடன் இரு தடவைகள் கலந்துரையாடினார் என அடுத்த வாரம் வெளிவரவுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 4 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றார். எனினும், இத்தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறிய அவர், தானே தேர்தலில் வெற்றிபெற்றதாக கூறி வந்தமை குறி;ப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புத் திகதி நெருங்கிய தருணத்திலும், அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில், ஜனவரி 6 ஆம் திகதி தேர்தல் கல்லூரி வாக்குகள் எண்ணப்பட்ட வேளையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தல் புகுந்து குழப்பம் ஏற்படுத்தியதைடுத்தும், சீனா மீது தாக்குதலுக்கு ட்ரம்ப் உத்தரவிடக்கூடும் என அமெரிக்க படை அதிகாரிகளின் பிரதானிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மிலீ அச்சம் கொண்டு, இது குறித்து சீன இராணுவத் தளபதி ஜெனரல் லீ ஸுவோசெங்குடன் கலந்துரையாடினார் என மேற்படி நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘உங்களிடம் யார் என்ன சொன்னாலும் சரி, நீங்கள் நடைமுறைகளைப் பின்பற்றுங்கள், நானும் அந்த நடைமுறையின் ஓர் அங்கம்’ எனக் கூறினார். அந்த அறையிலிருந்த ஒவ்வொருவரையும் நேர் நேருக்கு அவர்களின் கண்களைப் பார்த்து ‘விளங்கிக் கொண்டீர்களா’ எனக் கேட்டார். அவர்கள் ஆம் சேர் என பதிலளித்தனர். அதை ஓர் உறுதிமொழியாக ஜெனரல் மிலீ கருதினார் என வுட்வார்ட் மற்றும் கொஸ்ட்டா ஆகியோர் எழுதியுள்ளனர்.
ஜனவரி 5 ஆம் திகதி வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் உப ஜனாதிபதி மைக் பென்ஸுக்கும் நடந்த வாக்குவாதம் குறித்தும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் தான் எப்படி செயற்பட வேண்டும் என்பது குறித்து ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலத்தில் உப ஜனாதிபதியாக பதவி வகித்த டேன் க்வைலிடம் மைக் பென்ஸ் பிரத்தியேமாக ஆலோசனை கேட்டதாகவும் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் மார்க் மிலீயை அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தொலைபேசியில் அழைத்து, நாடாளுமன்றம் மீதான தாக்குதல் குறித்த விசனத்தை வெளிப்படுத்தியமை குறித்தும் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளன என மார்க் மிலீ உறுதியளித்தாகவும். அந்த தொலைபேசி அழைப்புக்கு பின்னரே, இவ்விடயத்தில் தான் செயற்பட வேண்டியுள்ளதாக ஜெனரல் மிலீ தீர்மானித்தார் என இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஜனவரி 15 ஆம் திகதியுடன் அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான உத்தரவொன்றிலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தை ஜெனரல் மார்க் மிலீ கண்டறிந்தார். ட்ரம்பின் விசுவாசிகள் இருவரால் அந்த உத்தரவுப்பத்திரம் எழுதப்பட்டிருந்தது. ஆனால், இறுதில் அது ரத்துச்செய்யப்பட்டது எனவும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி நீக்கும் கோரிக்கையை பைடன் நிராகரிப்பு
மேற்படி தகவல்களை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். மேற்படி கதை உண்மையானால், ஜெனரல் மார்க் மிலீ மீது தேசத் துரோக வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவைத் தாக்குவதற்க தான் நினைக்கவுமில்லை என அவர் கூறியுள்ளார்.
ஜெனரல் மார்க் மிலீயை ஜனாதிபதி ஜோ பைடன் உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என குடியுரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் மார்கோ ரூபியோ கடிதமொன்றின் மூலம் கோரியுள்ளார்.
ஆனால், இக்கோரிக்கையை ஜனாதிபதி ஜோ பைடன் நிராகரித்துள்ளார். ஜெனரல் மார்க் மிலீ மீது தனக்கு பெரும் நம்பிக்கை உள்ளதாக அவர் புதன்கிழமை (15) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீன இராணுவத் தளபதி லீ ஸுவோசெங்குடனான தனது தொலைபேசி அழைப்புகள், தனது சாதாரணக் கடமையின் ஒரு பகுதி என ஜெனரல் மார்க் மிலீ தெரிவித்து;ளளார்.
மேற்படி அழைப்புகள், மூலோபாய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான உறுதிமொழிகளை தெரிவிக்கும் கடமை மற்றும் பொறுப்புகளுக்கு உட்பட்டதாகும் என அமெரிக்க இராணுவ பேச்சாளர் கேணல் டேவ் பட்லர் தெரிவித்துள்ளார்.