நல்லாட்சி அரசாங்கத்தில் நெல்லின் உத்தரவாத விலை 30 ரூபாவாக காணப்பட்ட போது வீதிக்கிறங்கி போராடாத விவசாயிகள் தற்போது நெல்லின் உத்தரவாத விலை 55 ரூபாவாக அதிகரித்துள்ள போதும் எதிர்ப்பு தெரிவிப்பது கவலைக்குரியது.
சந்தைக்கு நெல்லை விநியோகிக்காவிட்டால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும். இதனால் அரசி இறக்குமதி செய்ய நேரிடும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
விவசாயத்துறை அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் -19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் பொருளாதார மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. நெல்லின் உத்திரவாத விலையை அதிகரிக்குமாறு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறார்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாத்திரம் கவனம் செலுத்தினால் நுகர்வோர் உட்பட ஏனைய சேவை பெறுநர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஒரு கிலோகிராம் நாடு வகை நெல்லின் உத்தரவாத விலை 55 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா வகை நெல்லின் உத்தரவாத விலையை 60 ரூபாவினாலும், கீரி சம்பா வகை நெல்லின் உத்தரவாத விலையை 70 ரூபாவினாலும் அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
நாடு வகை நெல்லின் விலையை 55 ரூபாவிலிருந்து 60 தொடக்கம்65 ரூபாவாக அதிகரிக்குமாறு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துவது முறையற்றது. 1 கிலோகிராம் நாடு நெல் உற்பத்திக்கான செலவு 28 ரூபா தொடக்கம் 30 ரூபாவாக காணப்படுகிறது.
55 ரூபா உத்தரவாத விலைக்கு அமைய ஒரு ஹெக்டயார் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கையினால் விவசாயிகள் செலவுகள் மிகுதியாக 132500 ரூபா வருமானம் பெறுகிறார்கள்.
தற்போதைய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான சேதன பசளை சீன நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்கமதி செய்யப்படும் சேதன பசளை தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சேதன பசளை என்ற பெயரில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்றார்.