அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவே ஊடகங்களிடம் தெரிவித்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
ஆனால், சிறைச்சாலைகளில் எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் இணைய ஊடகமொன்றுக்கு தான் தெரிவித்த அறிக்கையின் ஒரு பகுதியை மட்டும் மேற்கோள் காட்டி சமூக வலைத்தளங்களில் இவ்வாறு உண்மைக்கு புறம்பான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் ஒருவரின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்வது தனது கடமையெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மேலும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உள்ளிட்ட குழுவினர் வெலிக்கடை, அனுராதபுரம் ஆகிய சிறைகளுக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.