பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து என்பவற்றின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பிலான யோசனை நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் கூடிய வாழ்க்கை செலவுக் குழுவிடம் முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுக் குழு யோசனை முன்வைத்துள்ளது.
அத்துடன், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவு இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய இன்று (27) பிற்பகல் 5 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் தொலைக்காணொளி ஊடாக அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.
அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறுமாயின், ஒரு கிலோகிராம் பால்மாவின் விற்பனை விலை 1,145 ரூபாவாக நிர்ணயிக்கப்படும்.
அத்துடன், 50 கிலோகிராம் நிறை கொண்ட சீமெந்து மூடையின் விற்பனை விலை 1,050 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது