இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையிலான முறைமையொன்றை அரசாங்கம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இது தொடர்பில் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும், நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக தற்போது உடனடியாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
டொலர்களில் வரி செலுத்துவதற்கு ஒப்புக்கொள்ளும் நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போதுள்ள காரணிகளை ஆராய்ந்ததன் பின்னரே இது தொடர்பில் இறுதி தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க ஒரு விசேட திட்டத்தை ஏற்கனவே தொடங்கியிருப்பதாகவும், இந்த பயணத்தில் சிலர் அதிருப்தி அடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மீண்டும் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கினால், தற்போது அதிகரித்து காணப்படும் வாகனங்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுமெனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.