நாரஹேன்பிட பிரபல வைத்தியசாலையின் கழிவறையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகலை மஹவ பிரதேசத்தில் தனது காதலியின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் குறித்த சந்கேதநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் வழங்கிய தகவலுக்கு அமைய வெலிகந்த புதிய மஹசென்புரவில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு பின்னால் புதைக்கப்பட்டிருந்த 18 தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அமைச்சர் வாசஸ்தலம் ஒன்றில் கடந்த சில தினங்களாக திருத்தப்பணியில் ஈடுபட்டதாகவும் அங்கிருந்து குறித்த கைக்குண்டையும் தோட்டாக்களையும் மீட்டதாக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாசஸ்தலத்தில் தற்போது எவரும் வசிக்கவில்லை எனவும் குறித்த கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் அங்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.