(எம்.எப்.எம்.பஸீர்)
ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டுகச்சிய பகுதியில், வேன் ஒன்றினால் மோதப்பட்டு படுகாயமடைந்த நபரை, அதே வேனில் சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறி, அழைத்து சென்று காட்டுப் பகுதியில் கைவிட்டு சென்ற கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சுமார் 6 மணி நேரத்துக்கு பின்னர் கட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த நபர், மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ – கொட்டுகச்சி – நீர்ப்பாசன சந்தி பகுதியை சேர்ந்த 53 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரரான சரத் பண்டார அத்தபத்து என்பவரே இந்த கொடூர சம்பவத்துக்கு முகம் கொடுத்தவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய வேனின் உரிமையாளர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயல் வேலைக்காக சென்றுள்ள, ஓய்வுபெற்ற இராணுவ வீரர் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி வேகமாக பயணித்த வேன் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தையடுத்து அப்பிரதேச மக்கள் வேனை சூழ்ந்துகொள்ளவே, சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு காயமடைந்த நபரை அழைத்து செல்வதாக கூறி, காயமடைந்தவரை வேனில் ஏற்றிக் கொண்டு சந்தேக நபர்கள் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த நபரின் உறவினர் ஒருவர் புத்தளம் வைத்தியசாலைக்கு சென்று அங்கு அது தொடர்பில் விசாரித்தபோது, அவ்வாறு எவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து விடயம் புத்தளம் மற்றும் ஆனமடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தையடுத்து ஒன்றுகூடிய பிரதேசவசிகளில் பெண் ஒருவர் குறித்த வேனை தனது கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்திருந்த நிலையில், அந்த வேனின் இலக்கத் தகட்டை வைத்து ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன் பிரகாரம் குறித்த வேன் தொடர்பிலான விபரங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஊடாக திரட்டப்பட்டுள்ள நிலையில், வேனானது புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது. பொலிஸார் அந்நபரைக் கைது செய்து விசாரித்தபோது, வேன் நண்பர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும், விபத்தொன்றையடுத்து நாளை வேனை சரி செய்து கொண்டு வந்து தருவதாக அவர்கள் கூறியதாகவும் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவரது தகவல்களுக்கு அமைய நண்பர்களையும் கைது செய்த பொலிஸார், அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைக்கமைய, காயமடைந்தவரைக் கைவிட்டு சென்ற காட்டுப் பகுதியை கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி குறித்த இடத்தை பொலிஸார் அடையும்போதும் காயமடைந்த நபர் மிக கவலைக்கிடமாக காணப்பட்ட நிலையில், அவரை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.