ரயிலிலிருந்து சென்று திட்டமிட்ட இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை வடகொரியா இராணுவம் புதன்கிழமை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.
வடகொரிய நாடானது அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் உலக அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.
இந்நிலையில் ரயிலிலிருந்து புறப்பட்டு திட்டமிட்ட இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. கிழக்கு கடற்கரைப் பகுதியில் சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் இருந்த இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலைப் பகுதியில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையானது தீப்பிழம்புகளுடன் புறப்பட்டு செல்லும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
யாங்டோக்கின் மத்திய பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான இரண்டு ஏவுகணைகளை அந்நாடு சோதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.