ஆனமடுவ-கன்னங்கர மாதிரி பாடசாலையில் நேற்று (21) கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்ற போது இளைஞர் யுவதிகள் சிலர் மயங்கி வீழ்ந்தமையானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்கை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி வேலைத்திட்டம் 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டோருக்காக இடம்பெற்றிருந்ததோடு, சுமார் 200 பேருக்கு இதன்போது தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுமார் 20 நிமிடங்கள் வரையில் தடுப்பூசி மையங்களில் காத்திருக்குமாறு அறிவுறுத்தி இருந்த நிலையில், இவ்வாறு காத்திருந்த போதே இளைஞர் யுவதிகள் மயங்கி வீழ்ந்துள்ளனர்.
இதன்போது விரைந்து செயற்பட்ட சுகாதார அதிகாரிகள் அவர்களுக்கு சுமார் 1 மணித்தியாலம் வரை முதலுதவி வழங்கியதோடு, அதன்பின் உறவினர்களுடன் வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (தமிழன்)