ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் மற்றும் ஜெரூசலம் பகுதிகளில் இஸ்ரேல் இராணுவம் இரவு நேரத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புச் சோதனையின்போது நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வட மேற்கு ஜெரூசலத்தின் பித்து கிராமத்தில் மூன்று பலஸ்தீனர்களும் வட மேற்கு ஜெனினில் புர்கின் என்ற கிராமத்தில் மற்றொரு பலஸ்தீனரும் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐந்தாவது ஒரு பலஸ்தீனரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானபோது அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் முஹமது ஹலில் தெரிவித்தார். இதில் மூன்று பலஸ்தீனர்களின் உடல்கள் இஸ்ரேலின் பிடியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் சுற்றிவளைப்புத் தேடுதலின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையிலேயே இந்த பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரு இஸ்ரேலிய படையினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
பலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் சுற்றிவளைப்புகள் அண்மைய மாதங்களில் நாளாந்த நிகழ்வாக மாறியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற இவ்வாறான சம்பவத்தில் இஸ்ரேல் இராணுவத்தால் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.