Our Feeds


Wednesday, September 29, 2021

Anonymous

01ம் திகதி நாடு திறக்கப்படுமா? இறுதித் தீர்மானம் எப்போது - அமைச்சர் விளக்கம்



மகேஸ்வரி விஜயனந்தன்


நாட்டைத் திறப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே உரிய தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண, நாட்டின் தற்போதைய நிலையில், தொற்றாளர்கள், தொற்று மரணங்கள், ஒட்சிசனைப் பெறும் நோயாளர்கள் ஆகிய எண்ணிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், தொற்றுக்கு உள்ளாகும் மற்றும் தொற்றின் அறிகுறிகளுக்கு உள்ளாகும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு 2 வாரங்களின் பின்னர், அவர்களின் உடலுக்குள் சாதகமான நோயெதிர்ப்பு சக்தி ஏற்படும் என கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் கூடிய கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில், கலந்துகொண்ட வைத்தியர்களின் கருத்துகளை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

இதற்கமைய, இவ்வாறு இரண்டு டோஸ்களையும் செலுத்தி நிறைவு செய்ததன் பின்னர், அறிவியல் ரீதியின் அடிப்படையில் அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து நாட்டை திறக்க முடியும் என்றார்.

ஆனால் நாட்டை திறப்பது குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என தெரிவித்த அவர், ஒக்டோபர் மாதத்தின் பின்னர், இலங்கை புதிய யுகத்தை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »