(எம்.மனோசித்ரா)
ராகமை வைத்தியசாலையில் கடந்த 6 மாதங்களாக அடையாளம் காணப்படாத நிலைமையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்காமல் 48 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தமையே அண்மையில் அங்குள்ள பிரேத அறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட பிரதான காரணமாகும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
இவற்றில் 28 சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவற்றை வெகுவிரைவில் அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
சடலங்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்காக உள்ளுராட்சி உறுப்பினர்கள், பொலிஸார் , முப்படையினர் , அரச அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது : ராகமை வைத்தியசாலையில் கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆலோசனைக்கமைய தீர்வைக் காண்பதோடு , அதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
கடந்த தினங்களில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களில் சடலங்கள் குவிந்தமையின் காரணமாக வடகொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இவ்வாறான நிலைமை மீண்டும் உருவாகாத வகையிலும் மற்றும் சுகாதாரத்தரப்பினருக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையிலும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உள்ளுராட்சி உறுப்பினர்கள் , பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டுள்ளன என்றார்.