(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
தலிபான்களின் தொடர் போராட்டமும் கொள்கைப்பிடிப்பும் இலக்கு நோக்கிய பயணமும் அவர்களை இன்று தமது தாய் நாட்டை அடைய வைத்திருக்கிறது. தலிபான்களின் விடுதலை என்பது சரியா? பிழையா? என்பது பிரச்சினையல்ல. சுதந்திர இயக்கங்களுக்கும் சுதந்திரத்துக்கு போராடுகின்ற இனங்களுக்கும் தலிபான்களின் விடுதலை ஒரு மாற்றத்தை தந்திருக்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். சபையில் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17) வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாடு மிகப்பெரியதோர் அபாயத்துக்குள் சிக்கியிருக்கின்றது என்று கூறப்படுகின்றது. ஆனால் குருந்தூர் மலையிலே பிக்குகளும் இராணுவத்தினரும் பொலிஸாரும் சென்று பாரிய விஹாரையை அமைக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பொன்னாலையில் சிறிய குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினைக்காக பொன்னாலை இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் சென்று அங்குள்ளவர்களை தாக்கியுள்ளனர். இவ்வாறு தாக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது என்று அங்குள்ளவர்கள் கேட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.