Our Feeds


Saturday, August 14, 2021

www.shortnews.lk

கேரள கடற் பரப்பில் இலங்கை படகிலிருந்து ஆயுதங்கள், மற்றும் போதைப் பொருள் - LTTE இயக்கத்திற்கு தொடர்பா?

 



கேரள கடற்பரப்பில் இலங்கை படகொன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் 3 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியுடைய ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.


ஐந்து AK47 துப்பாக்கிகள் மற்றும் 3 ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் சென்னையில் வசிக்கும் இரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

மார்ச் மாதம் 25 ஆம் திகதி கேரளா கடற்கரையில் இலங்கை படகொன்றில் இருந்து ஐந்து AK47 துப்பாக்கிகள் மற்றும் 3 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியுடைய ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது

இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் சென்னையில் வசிக்கும் இரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

இதன்பிரகாரம் சின்ன சுரேஷ் என்று அழைக்கப்படும் சுரேஷ் ராஜ் மற்றும் சவுந்தர் என்று அழைக்கப்படும் சவுந்தர் ராஜனிடம் தமிழ் நாடு கியூ பிரிவு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தது.

இதன் பின்னர் குறித்த இருவரும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய , கொச்சி நகருக்கு அழைக்கப்பட்டு இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த இருவரிடம் மேற்கொள்ளப்ட்ட விசாரணைகளில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் உட்பட வெளிநாட்டு போதை பொருள் விநியோகஸ்தர்களுடன் தொடர்பை பேணி வந்தமை தெரியவந்துள்ளது

அத்துடன், குறித்த பாகிஸ்தான் பிரஜை அதிக அளவிலான ஹெரோயின், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் மீன்பிடி கப்பல்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்த பட்டுள்ளதாகவும் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் என்பவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் குறித்த நபர் விடுதலை புலிகளுடன் தொடர்புகளை பேணி வந்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த நபர் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் விசா மற்றும் கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(tntamil)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »