வைத்தியர்கள் பரிந்துரைகளை முன்வைப்பார்களாயின், நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயார் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே, தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, கொவிட்−19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டை முடக்குவதற்கான பரிந்துரைகளை, விசேட வைத்திய நிபுணர்கள் இதுவரை முன்வைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு, கொவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி ஆகியவற்றை போன்றே, அரசாங்கத்திற்கு வெளியிலும் பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எனினும், அரசியல் அழுத்தங்களுக்கு கீழ்படிந்து செயற்படுகின்ற சிலர் உள்ளதாகவும், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தேவையே அவர்களுக்கு உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர், தமக்கு உத்தியோகப்பூர்வமாக ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பார்களாயின், அதனை நடைமுறைப்படுத்துவதாக அவர் தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, அன்றாடம் உழைத்து, தமது வாழ்க்கையை முன்னெடுப்போர், வாழ்வதற்கான யோசனைகளையும் முன் வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.