கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல் வழங்கிய நிலையில், கைது செய்யப்பட்ட முன்னாள் விமானப்படை அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளரான பெண் அதிகாரிக்கு, குறித்த நபர் தகவல் வழங்கியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தகவல் வழங்கிய முன்னாள் விமானப்படை அதிகாரியின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், அவர் வழங்கிய தகவல் தொடர்பில் ஆராய்வதாகவும் சரத் வீரசேகர கூறினார்.
குறித்த நபர் விமானப் படையின் முன்னாள் உறுப்பினர் என்பதால், அந்த நபருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக தௌிவு இருக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், அத்தகைய தகவல் கிடைத்திருந்தால், அவர் அதனை பொலிஸாருக்கோ இராணுவத்திற்கோ அறிவித்திருக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். (TC)