வர்த்தக வங்கிகளில் டொலர்கள் பெற்றுக்கொடுக்கப்படாத காரணத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக அறியமுடிந்தது.
ஜுலை மாதத்துக்கென வெளிநாடுகளிலிருந்து கொள்வனவுசெய்யப்பட்ட அத்தியாவசியப்பொருட்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் வர்த்தக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் ‘தமிழன்’ வார இதழுக்குத் தெரிவித்தார்.
வர்த்தக வங்கிகள் டொலர்களைப் பெற்றுக்கொடுக்க மறுப்பதன் விளைவாக இறக்குமதிக்குரிய பணத்தை செலுத்த முடியாதுள்ளதாக அந்தச் சங்கம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ஜீ. இராஜேந்திரன் மற்றும் செயலாளர் ஜீ.எஸ். இளமைநாதன் ஆகியோர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் விளக்கமளித்துள்ளனர்.
டொலர்கள் பெற்றுக்கொடுக்கப்படாத காரணத்தினால் கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பதாகவும் அவற்றுக்கான பராமரிப்புசெலவு, காலதாமதச்செலவு ஆகியவற்றையும் தமக்கு செலுத்தவேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இந்நிலைமையால் இறக்குமதிசெய்யப்பட்ட பொருட்கள் காலாவதியாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி, மிளகாய், வெள்ளைப்பூண்டு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கென மாதாந்தம் 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.