அபாயா அணிந்த முஸ்லிம் பெண்களில் 90 வீதமானோர் விபச்சாரம் புரிவதாகவும் போதை வஸ்த்து கடத்துவதாகவும் கூறிய நடராஜா ரவிராஜ் என்பவரின் கூற்றை நாம் வண்மையாக கண்டிப்பதுடன் இவருக்கெதிராக மக்கள் வாக்குகள் பெற்ற முஸ்லிம் கட்சிகளும் சிவில் இயக்கங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் ரிசாத் பதியுதீன் வீட்டில் எரிகாயங்களுடன் மரணித்த பெண் பற்றி, ஒரு காலத்தில் மனோ கணேசனின் வாலாக இருந்த நடராஜா என்பவர் 90 வீதமான முஸ்லிம் பெண்கள் அபாயா அணிந்து விபச்சாரத்திலும் போதை வஸ்த்து கடத்தலிலும் ஈடு படுவதாக பேசியுள்ளார்.
அவரிடம் நாம் கேட்கிறோம், இப்படி நீங்கள் எத்தனை பேரைக்கண்டாய் என்பதை ஆதாரத்துடன் சொல்ல முடியுமா? அல்லது உங்கள் பெண்கள் அபாயா அணிந்து தம்மை மறைத்து இச்செயல்களில் ஈடுபடுகிறார்களா?
முஸ்லிம் பெண்களின் அபாயா பற்றி கேவலமாக பேசும் போது தமிழ் பெண்களின் சாரி பற்றி மற்றவர்களால் பேச முடியாதா?
ரிசாத் பதியுதீன் விடயத்தில் இந்த அரசாங்கம் மிகச்சரியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறமையான பொலிஸ் குழுவை அமைத்துள்ளார். உண்மை என்ன, யார் குற்றவாளி என்பதை நிச்சயம் பொலிசார் கண்டு பிடிப்பர் என்ற உறுதி எமக்குண்டு. அதுவரை பொறுக்க முடியாமல் இதனை இனவாதமாக மாற்றும் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
நடராஜாவின் இனவாத கருத்துக்கள் அமைதியாக, இறுக்கமாக இருக்கும் மேல்மாகாண தமிழர், முஸ்லிம்கள் உறவுகளிடையே இனவாதத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். இதில் பொலிசாரும் தலையிட்டு இவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
பெரும்பாலான முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தும் இக்கருத்துக்காக இவர் பகிரங்க மன்னிப்பு கோரி தன் கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என கோருகின்றோம்.
- முபாறக் அப்துல் மஜீத்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி.